‘ஆட்சியில் பங்கு’ என காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்திக் கொண்டிருக்கும் சூழலில், ‘கூட்டணி ஆட்சியெல்லாம் தமிழகத்துக்கு சரிப்பட்டு வராது’ என தடாலடியாக மறுத்துள்ளார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின்.
விஜய் அரசியலுக்கு வந்தது தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுக்கும் அனுகூலமாகிவிட்டது. டிடிவி தினகரன், அன்புமணி தொடங்கி கிருஷ்ணசாமி வரை தவெகவை வைத்து கேம் ஆடிய நிலையில், காங்கிரஸும் விஜய்யை வைத்து திமுகவுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது.
கடந்த சில வாரங்களாகவே காங்கிரஸில் கலகக் குரல்கள் அதிகமாகியிருக்கிறது. ‘ஆட்சியில் பங்கு வேண்டும், அதிகம் தொகுதிகள் வேண்டும்’ என்பதை அழுத்தமாக சொல்லி வருகின்றனர் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர். இவர்களின் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதுபோல டெல்லி தலைமையும் பெரிதாக கண்டிக்காமல் அப்படியே விட்டுவிட்டது.
2006-ல் 34 தொகுதிகளில் வென்று, 96 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த திமுகவுக்கு ஆட்சியில் பங்கு கோராமலேயே பரிபூரண ஆதரவளித்தது காங்கிரஸ். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் 2016-ல் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் மட்டுமே கொடுத்தது திமுக.
2021 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கான கோட்டாவை இன்னும் குறைத்து 25 ஆக்கியது. 2026 தேர்தலில் காங்கிரஸுக்கான தொகுதிகள் இன்னும் குறைக்கப்படலாம் என்று அரசல் புரசலாக பேசப்பட்டது. இதனை மனதில் வைத்தே காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்த்து வந்தது திமுக.
தங்களுக்கான தொகுதிகள் குறைக்கப்படலாம் என்பதை யூகித்த காங்கிரஸ், அடுத்த ஆப்ஷனாக தவெகவை கையில் எடுத்தது. மிகக் குறைவான தொகுதிகளை திமுக ஒதுக்கினால், தவெக பக்கம் செல்வோம். வெற்றிபெறவில்லை என்றாலும், கட்சியை உயிர்ப்பிப்போம். விஜய்யின் செல்வாக்கை வைத்து தேர்தல் நடைபெறவுள்ள புதுச்சேரி, கேரளாவில் வெற்றி பெறுவோம் என்றெல்லாம் கணக்குப் போட்டது.

