வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்தியாவின் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல் மற்றும் அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் சௌனா மேய்ன் உள்ளிட்ட இந்திய தூதுக்குழுவினர் திங்கட்கிழமை (09) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, பெப்ரவரி 11 ஆம் திகதி தெவ்னிமோரி புனித சின்னங்களை இந்தத் தூதுக்குழு இந்தியாவுக்கு கொண்டு செல்லவுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் தெவ்னிமோரி புனித சின்னங்கள் பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கொழும்பு, ஹுனுபிட்டி கங்காராம விகாரையில் மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.
பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை 24 மணி நேரமும் புனித சின்னங்களை வழிபட பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பரோதா அருங்காட்சியகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்தப் புனிதச் சின்னங்கள், இதுவரை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன், முதன்முறையாக, இலங்கை மக்கள் இந்தப் புனிதச்சின்னங்களைத் தங்கள் கண்களால் பார்த்து வழிபடும் வாய்ப்பைப் பெற்றிருப்பது சிறப்புக்குரியது.

