‘வளமான’ அதிமுக கூட்டணியிடம் ‘பலம்’ இல்லை: கி.வீரமணி கருத்து

17 0

 “அதிமுக வளமான கூட்டணியாக இருக்கலாம். ஆனால், பலமான கூட்டணியாக இருக்க வாய்ப்பில்லை” என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பலமான கூட்டணி என்று தற்போது அனைவருமே கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பலமான கூட்டணியா, இல்லையா என்பதற்கு ஏற்கெனவே நடைபெற்று முடிந்த தேர்தல்கள் நிரூபித்திருக்கின்றன. அதிமுக வளமான கூட்டணியாக இருக்கலாம். ஆனால், பலமான கூட்டணியாக இருக்க வாய்ப்பில்லை.

வருமானத்தை மறைந்ததற்காக தவெக தலைவர் ​விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊழலை ஒழிப்பேன் என விஜய் பேசுவது எப்படி? எந்தக் கொள்கையும் அவரிடம் இல்லை. இன்னும் அவர் அரசியல் செய்யவில்லை. ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் அரசியலுக்கு வரும்போது அவரைப் பற்றிப் பேசலாம். அவரைப் பேசுவது எங்களைப் போன்றோருக்கு உரித்தானது அல்ல.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஒவ்வொரு முறை தமிழகத்துக்கு வந்து செல்வதால், திமுக கூட்டணிக்கு வாக்குகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு பூக்கள் வேண்டுமானால் அதிகமாக கொட்டப்படலாம், ஆனால், வாக்குகள் கிடைப்பதில்லை” என்றார்.