“இந்தியா – பாக். போரை நிறுத்தியது நானே!” – 90வது முறையாக ட்ரம்ப் தம்பட்டம்

10 0

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். 90-வது முறையாக அவர் இப்படி சொல்வது குறிப்பிடத்தக்கது.

“கம்போடியா மற்றும் தாய்லாந்து, கொசோவோ மற்றும் செர்பியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் ஈரான், அர்மேனியா மற்றும் அசர்பைஜான் என கடந்த ஓராண்டில் நான் எட்டு போர்களை நிறுத்தி உள்ளேன்.

உலகில் சக்தி வாய்ந்த நாடு என்றால் அது அமெரிக்காதான். முதல் முறையாக நான் அதிபராக இருந்தபோது ராணுவத்தை கட்டமைத்தேன். இதில் அணு ஆயுதங்கள் உட்பட பல்வேறு நவீன ஆயுதங்களும் உள்ளடங்கும். இப்போது அதை மேலும் சக்தி வாய்ந்த ராணுவ படையாக கட்டமைத்துள்ளேன். இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட போர் கப்பலை காட்டிலும் நூறு மடங்கு சக்திவாய்ந்த போர் கப்பல்கள் நம் வசம் உள்ளது.

இந்தியா – பாகிஸ்தான், ரஷ்யா – உக்ரைன் மற்றும் இஸ்ரேல் – ஈரான் இடையிலான அணு ஆயுதப் போரை நான் நிறுத்தினேன்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு மே 10-ம் தேதி அன்று இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்தம் குறித்து சமூக வலைதளத்தில் ட்ரம்ப் பதிவிட்டார். அதுமுதல் இதுவரை 90 முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை தான் நிறுத்தியதாக அவர் சொல்லியுள்ளார். இருப்பினும் இதில் மூன்றாம் தரப்பின் குறுக்கீடு இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது.