பாராளுமன்ற மேலாதிக்கத்தைத் தவிர்த்து அரசியலமைப்பு மேலாதிக்கம் நிறுவப்படவேண்டும்

12 0

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படவேண்டும். நாம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையிலிருந்து பாராளுமன்ற ஜனநாயக முறைமையை நோக்கி நகரவேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இதன்போது பாராளுமன்ற மேலாதிக்கம் உருவாவதைத் தவிர்த்து, அரசியலமைப்பு மேலாதிக்கமே நிறுவப்படவேண்டும் என கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.

தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அப்புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்குவதற்காக தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்ததும், தொழில்நுட்ப ரீதியாக உறுதியானதும், உண்மையிலேயே சகலரையும் உள்ளடக்கியதுமான ஓர் அணுகுமுறையை நிறுவும் நோக்கில் ‘வன் டெக்ஸ்ட் இனிஸியேட்டிவ்’ (One Text Initiative) எனும் அமைப்பினால் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு கலந்துரையாடல் செயன்முறையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதுமாத்திரமன்றி இதுபற்றிய தகவல்களைப் பகிர்வதுடன், கருத்தாடல்களைக் கட்டியெழுப்பும் நோக்கில் citizen’s constitution.lk என்ற இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துரைக்கையிலேயே ஜயம்பதி விக்ரமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2016 – 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையைத் தொடர்வதாக அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளித்தது. அச்செயன்முறையைத் தொடர்வதற்கும், அதனை முன்னிறுத்திய கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும். இருப்பினும் இச்செயன்முறையில் சகல தரப்பினரும் உள்வாங்கப்படவேண்டியது மிக அவசியமாகும்.

அதேபோன்று எமது நாட்டில் அரசியலமைப்பு சகலவற்றிலிருந்தும் மேலோங்கியதாகத் திகழ்கிறதா என்ற கேள்வி நிலவுகின்றது. ஏனெனில் இங்கு பாராளுமன்றம், ஆணைக்குழுக்கள், உபகுழுக்களின் தீர்மானங்களை சவாலுக்கு உட்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இருப்பினும் அண்மைய காலங்களில் மேற்கூறப்பட்ட கட்டமைப்புக்களால் அரசியலமைப்புக்கு முற்றிலும் விரோதமான சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

நாம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையிலிருந்து பாராளுமன்ற ஜனநாயக முறைமையை நோக்கி நகரவேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படவேண்டும். ஆனால் இதன்போது பாராளுமன்ற மேலாதிக்கம் உருவாவதைத் தவிர்த்து, அரசியலமைப்பு மேலாதிக்கமே நிறுவப்படவேண்டும் என்றார்.