ரிலிய சவிய அமைப்பு தொடர்பில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் சிராந்தி ராஜபக்ஷவை நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்தமை அரசியல் அடக்குமுறை என்றே குறிப்பிட வேண்டும். அரசியல் பிரதிவாதிகளை ஏதாவதொரு வழியில் நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு அரசாங்கம் இவ்வாறான முறையற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘சிரிலிய சவிய’ அமைப்பு தொடர்பில் வாக்குமூலம் வழங்க நிதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார்.
சிரிலிய சவிய 1980 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க சமூக அமைப்பு சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தன்னார்வ சேவை அமைப்பாகும். 2006.12.08 ஆம் திகதி ‘எப்எல் -111201’ ஆம் பதிவு இலக்கம் ஊடாக சிரிலிய சவிய அமைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது.
சமூக கட்டமைப்பில் இருந்து வறுமையை ஒழித்தலையும், நலன்புரி சேவையையும் இந்தத் திட்டம் பிரதான நோக்கமாக கொண்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் பிரபல்யமான தன்னார்வ சேவை அமைப்பாக காணப்பட்ட சிரிலிய சவிய தொடர்பில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டது.
இதற்கமைய சிராந்தி ராஜபக்ஷ மற்றும் சிரிலிய சவிய அமைப்பின் அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நிதி குற்றப்புலனாய்வுத் திணைக்களம்,மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளித்துள்ளனர்.
2015 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகளினால் சிரிலிய சவிய அமைப்பின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன. அமைப்பின் செயற்பாடுகளை தொடர்ச்சியான மேற்கொண்ட முன்னெடுத்த சட்ட நடவடிக்கைகளும் பல்வேறு காரணிகளால் வெற்றியளிக்கவில்லை.
11 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த விடயம் தொடர்பில் சிராந்தி ராஜபக்ஷவை நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்தமை அரசியல் அடக்குமுறை என்றே குறிப்பிட வேண்டும். அரசியல் பிரதிவாதிகளை ஏதாவதொரு வழியில் நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு அரசாங்கம் இவ்வாறான முறையற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.

