ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கே அதிக நன்மை கிடைக்கும் என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள ஜேமிசன் கிரீர், ‘‘இந்த ஒப்பந்தத்தை வியூக ரீதியாக புரிந்து கொள்வது முக்கியம். அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து, அமெரிக்க சந்தையை அணுகும் மற்ற நாடுகளுக்கான வரியை உயர்த்தியுள்ளார். இதனால், அந்த நாடுகள் தங்களின் அதிகப்படியான உற்பத்திக்கு மற்ற வழிகளைத் தேடுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் அப்படித்தான் இந்தியாவை கண்டுபிடித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தகத்தை அதிகம் சார்ந்திருக்கிறது. அவர்களால் தங்கள் பொருட்களை தொடர்ந்து அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாவிட்டால், அவர்களுக்கு மாற்று வழிகள் தேவை. இந்தியா உடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தத்தின் சில விவரங்களை நான் பார்த்திருக்கிறேன். வெளிப்படையாகச் சொன்னால், இதில் இந்தியாவுக்கே அதிக நன்மை என்று நான் நினைக்கிறேன்.
ஏனெனில், இந்தியாவுக்கு ஐரோப்பாவில் அதிக சந்தை அணுகல் கிடைக்கிறது. மேலும், அவர்களுக்கு கூடுதலான குடியேற்ற உரிமைகளும் கிடைப்பதாகத் தெரிகிறது. இதுபற்றி எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் வான் டெர் லேயன், இந்திய தொழிலாளர்கள் ஐரோப்பாவுக்கு இடம்பெயர்வது குறித்துப் பேசியுள்ளார். எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த ஒப்பந்தத்தால் இந்தியா மிகப்பெரிய செழிப்பை காணப்போகிறது என்று நான் நினைக்கிறேன்.
இந்தியாவில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தொழிலாளர் சக்தி இருக்கிறது. உலகமயமாக்கலின் சில சிக்கல்களைச் சரி செய்ய அமெரிக்கா முயற்சிக்கும் வேளையில், ஐரோப்பிய ஒன்றியம் உலகமயமாக்கலில் மேலும் தீவிரமாகச் செயல்படுவது போல தெரிகிறது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா படிப்படியாக குறைத்துக்கொள்ளும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதில், அவர்கள் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளனர். எனினும், இதில் அவர்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது. தள்ளுபடி விரையில் ரஷ்யா கச்சா எண்ணெய்யை கொடுப்பதை அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள்.
எனவே, அதை முழுமையாக கைவிடுவது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்திருப்பதால், இந்தியா படிப்படியாகக் குறைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதேநேரத்தில், இதை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என்று வர்ணிக்கப்படும் இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று (ஜன. 27) கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தால், ரூ.2091 லட்சம் கோடிக்கும் அதிகமான (24 டிரில்லியன் அமெரிக்க டாலர்) சந்தையுடன் இரு தரப்பிலும் உள்ள 200 கோடி மக்களுக்கு இணையற்ற வாய்ப்புகளை வழங்குமு் என எதிர்பார்க்கப்படுகிறது.

