எவரெஸ்ட் சிகரத்தில் மேலும் 4 உடல்கள் மீட்பு

230 0

கடந்த மாதம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி காணாமல் போன 4 பேரில் உடல்களை அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட ஷெர்பா பழங்குடியினர் கண்டுபிடித்துள்ளனர்.

உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டில் (8,848 மீட்டர்) ஏறி சாதனை படைப்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் நேபாள நாட்டுக்கு வருகின்றனர்.

கடந்த மாத இறுதியில் 7,950 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நான்காம் முகாம் பகுதியில் சிகரம் ஏறுவதில் ஈடுபட்டிருந்த 2 நேபாள நாட்டவர் உள்பட 4 பேர் திடீரென மாயமாகினர். அவர்களின் கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷெர்பா பழங்குடியினர் அந்த முகாம் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கூடாரம் அமைத்து தங்கியிருந்த 4 பேரும் பிணமாக கிடந்தனர். அவர்கள் 4 பேரும் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஒரு மாதத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோது பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.