“விஜய்யால் நல்ல நிர்வாகத்தை வழங்க முடியாது” – முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார்

5 0

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யால் நல்ல நிர்வாகத்தை வழங்க முடியாது” என்று அவரது முன்னாள் மேலாளரும், சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவர் கூறியது: “விஜய்யின் மேலாளராக 28 ஆண்டுகள் பணியாற்றினேன். புலி திரைப்படத்தின்போது வருமானவரி சோதனை மற்றும் உடல்நிலை சரியில்லாத காலங்களில் அவரிடமிருந்து ஆதரவோ, ஒரு தொலைபேசி அழைப்போ கூட எனக்கு வரவில்லை. இதனால், எதிர்காலத்திலும் விஜய் கண்டுகொள்ளமாட்டார் என்று உணர்ந்ததாலேயே திமுகவில் இணைந்தேன்.

விஜய்யால் சரியான நிர்வாகத்தை கொடுக்க முடியாது. இன்னும் அவர் பக்குவப்பட வேண்டும். நேர்மையான மற்றும் திறமையான நிர்வாகிகளை உடன் வைத்துக்கொள்ள வேண்டும். விஜய்யின் இயக்கத்தில் இருக்கும் ஒருசில பொறுப்பாளர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு பதவிகளை வழங்குகிறார்கள். மேலும் விஜய்யை தவறாக வழிநடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினை, விவசாயிகளின் பிரச்சினை, பனியன் தொழிற்சாலைகள் பிரச்சினை, கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் பிரச்சினை போன்று பல்வேறு பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விஜய் களம் இறங்கி நேரில் சென்று தெரிந்துகொள்ள வேண்டும்.

கிராமங்கள்தோறும் மக்களுடைய பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டால் மட்டுமே, மக்கள் நலன் சார்ந்து ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இல்லையேல் மக்கள் அவருக்கு தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்.

சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்திற்குக் கூட தாமதமாக சென்றுள்ளார். இதுபோன்ற செயல்கள் மூலம் அவரது ரசிகர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்கள். இது ஒரு மண் குதிரை. விஜய்யின் மக்கள் இயக்கம் தொடர்ந்து தவறான அரசியலில் ஈடுபட்டதால் புதுச்சேரியை விட்டுத் துரத்தப்பட்டதைப் போல தமிழகத்திலும் நடக்கும்” என்று அவர் தெரிவித்தார்.