யாழ் தீவகம் படகு சேவையில் சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கடற்படை; பொதுமக்கள் அதிருப்தி

226 0
குறிகட்டுவானில் இருந்து தீவகங்களுக்கு செல்லும் படகு சேவையில் சுற்றுலாப் பயணிகளுக்கே கடற்படையினர் முன்னுரிமை வழங்குகின்றனர் என்றும்  இச் செயற்பாட்டால் அன்றாடம் பணிநிமித்தம் பயணிக்கும் அரச அதிகாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிகட்டுவனில் இருந்து தீவுப்பகுதிகளுக்கு  அதிகளவான பயணிகள் அன்றாடம் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பயணம் செய்வதற்கு வடதாரகை, நெடுந்தாரகை மற்றும் குமுதினி படகுகள் பயன்பாட்டில் இருந்தன.
வடதாரகை ஒருமாதங்களுக்கு முன்னர் பழுதடைந்துள்ளது. நெடுந்தாரகை கடந்த நான்கு நாட்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்துள்ளது.
இந்த நிலையில் பணி நிமித்தம் தீவுகளுக்கு சென்று வரும் அதிகாரிகள் குறித்த படகு சேவை தொடர்பில் விசனம் அடைந்துள்ளதுடன் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்  நெடுந்தீவுக்கு நைனாதீவுக்கு பணி நிமித்தம் காரணமாக  அரச அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் சென்று வருகின்றனர். ஆனால் காலை 8.30 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் நெடுந்ததாரகை படகில் கடற்படையினர் சுற்றுலா பயணிகளையே ஏற்றி செல்கின்றனர். அதிலும் தமக்கு வேண்டியவர்களையே ஏற்றி செல்கின்றனர்.  சில வேளைகளில் குறித்த நேரத்துக்கு முன்னரும் படகு சென்றுவிடும். இதனால் அரச அதிகாரிகள் மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளகின்றனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் எடுத்து சொல்லியிருந்த போதும் எவரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை உரிய நடவடிக்கை எடுக்கவும் இல்லை.
சில வேளைகளில் குறிகட்டுவன் வரை சென்று பணிக்கு செல்லாமல் வீடு வர வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. காலை நேரத்தில் ஆரம்பிக்கும் பயணத்தில் அரச அதிகாரிகள் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ஆனால் அதை எவரும் கவனத்தில் எடுக்கவில்லை மிகவும் சிரமத்தின்  மத்தியில் சென்று வரும் எமக்கு, சாதகமான உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்வர்கள் உடனடியாக எடுக்க வேண்டும்.  அத்துடன் சுற்றுலா பயணிகளை முன்னுரிமைப்படுத்தி படகுகளில் ஏற்றும் கடற்படையினர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவ இடத்தில் அதிகாரிகள் கண்காணிப்பினை மேற்கொண்டால் எமது வேதனை அவர்களுக்கு புரியும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.