அநுராதபுரம் மதவாச்சி பொலிஸ் பிரிவின் இசின்பெஸ்ஸகல பகுதியிலுள்ள வீடொன்று க்குள் பெண் ஒருவரை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மதவாச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவுக்கு நேற்று திங்கட்கிழமை (27) கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மதவாச்சி,இசின்பெஸ்ஸகல பகுதியை வசிப்பிடமாக கொண்ட 81 வயதுடைய மூதாட்டி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
அங்கவீனமுற்ற மகனுடன் வீட்டில் வசித்துவந்துள்ளதுடன் 26 ஆம் திகதி இரவு நேரத்தில் மகன் தாயினை கோடரியால் தலையில் தாக்கி இக்கொலையை செய்துள்ளதாக தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் சந்தேக நபரை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஆரம்பகட்ட நீதிவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்காக வேண்டி சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

