யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை சேவைகள் விரிவாக்கம்!

47 0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை பிரிவின் சேவைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நீரிழிவு சிகிச்சை மையத்தை வெளிநோயாளர் கட்டடத் தொகுதியின் முதலாம் மாடியில் திறந்துவைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த பிரிவின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது இது வெளிநோயாளர் மற்றும் விபத்து சிகிச்சை கட்டடத் தொகுதிகளுக்கு இடையிலான பகுதியில் இரத்தப் பரிசோதனை மாதிரிகளை வழங்கும் பகுதி இடமாற்றம் செய்யப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைக்கப்படுவதுடன், பரிசோதனைகளுக்காக இரத்த மாதிரிகளை வழங்கும் நபர்கள் இலகுவாக இப்பகுதியில் சேவைகளை பெற முடியும்.

தினசரி 200க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இலகுவாகவும் முறையாகவும் சேவைகளை பெறக் கூடிய சூழல் இங்கு உருவாகியுள்ளது.

எனவே, இரு இடங்களில் சேவைகள் வழங்கப்படுகிறது.

மேற்படி நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் இதுவரை 40,000 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக பதிவாகும் நோயாளர் ஒருவருக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

பின்னர், வருடந்தோறும் நடைபெறும் பரிசோதனையின் மூலம் வளர்ச்சி நிலை மதிப்பீடு செய்யப்படுகின்றது. தேவைப்பட்டால் சிகிச்சை முறையிலும் மாற்றங்கள் செய்யப்படும்.

கடந்த 15 வருடங்களாக, இந்த சிகிச்சை மையத்திற்கு சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் தொடர்ந்து மேலதிக அனுசரணைகளும் ஆதரவுகளும் வழங்கி வருகின்றது.

இவ்வாறு நீடித்த பங்களிப்புகள், இந்நிலையின் வளர்ச்சிக்கும் நோயாளர்களுக்கான தரமான சேவைகளுக்கும் பெரும் பங்களிப்பாக உள்ளதாக வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.