திராணியற்ற சஜித்தும் மத்திய வங்கி கொள்ளைக்காரரான ரணிலும் இணைந்து மீண்டும் நாட்டை அகல பாதாளத்துக்கு கொண்டுசெல்ல முயற்சி

33 0

இந்த நாட்டை போதை நாடாக மாற்ற முயற்சித்து தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் மற்றும் ஒரு திராணியற்ற முதுகெலும்பு இல்லாத எதிர்க்கட்சியாக இருந்து வரும் சஜித் பிரேமதாச தலைமையிலான கட்சி, கடந்த காலத்தில் மத்திய வங்கி கொள்ளைகாரரான ஐக்கிய தேசிய கட்சியுடன் சேரமாட்டோம் என்றார்கள். இன்று வங்குரோத்து அரசியலுக்காக மீண்டும் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டை அதல பாதாளத்துக்கு தள்ளுவதற்கு முயற்சித்து வருகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாங்கள் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்பதை நீங்கள் அவதானிக்க முடியும். விசேடமாக இஷாரா செவ்வந்தி கைது செய்யப்படுவாரா? என பாராளுமன்றத்தில் கூட பேசப்பட்டது. ஆனால் எந்த ஒரு நாட்டில் இருந்தாலும் அவர்களை கைது செய்து வரக்கூடிய அரசாங்கமாக இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த நாட்டிலே பழம் பெரும் அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஊடாக இந்த நாடும் மக்களும் எதிர்நோக்கிய பிரச்சினைகள், ஊழல் மோசடிகள் பல. இந்நிலையில், மத்திய வங்கி கொள்ளையர்களுடன் ஒன்றுசேரமாட்டோம் என சஜித் பிரேமதாச அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் ரணில் ராஜபக்ஷ என நாங்கள் குறிப்பிடும்போது ரணிலுடன் மகிந்தவுக்கு நேரடியாக உறவு இருந்ததன் காரணமாக பின்கதவால் பாராளுமன்றத்துக்கு வந்தவர்தான் இந்த ரணில் விக்கிரமசிங்க. இவர் ஜனாதிபதியாக வருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு மகிந்தவுடன் இணைந்து ஜனாதிபதி ஆனார்.  இதற்கு சஜித் கட்சி அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அன்று ஒன்று சேரமாட்டோம் என்று கூறிய சஜித் அணியினர், இன்று அந்த நிலை மாறி அதே கட்சியுடன் ஒன்றிணைந்து தங்கள் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்த தலதா அத்துக்கோரல இப்போது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து, இரு கட்சியையும்  இணைத்துக்கொள்வதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

இன்று எதிர்க்கட்சி ஒரு திராணியற்ற முதுகெலும்பு இல்லாத எதிர்க்கட்சியாக இருந்து கொண்டிருக்கின்றது. விசேடமாக ஐக்கிய தேசிய கட்சியுடன் மட்டுமல்ல, நாமல் ராஜபக்ஷ, மஹிந்த அணியுடனும் சேர்ந்துள்ளனர்.

பின்கதவால் வழியாக பாராளுமன்றத்துக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு மகிந்தவுடன் இணைந்து ஜனாதிபதி ஆகினார். இவருடன் சஜித் கட்சியினர் ஒன்றிணைந்து இந்த நாட்டை ஆட்சி செய்யப்போவதாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகவே, இவர்களுக்குள்  எந்தக் கொள்கையும் இல்லாதவர்கள் எப்படி இந்த நாட்டை வழிநடத்தப் போகின்றனர்? அன்று கொள்ளையர்கள் என்றனர். இப்போது ஒன்று சேர்ந்தால் நோக்கம் என்ன? இவர்கள் வங்குரோத்து அரசியலை மக்களுக்கு பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த திராணியற்றவர்கள் ஒன்றுசேர்ந்து மீண்டும் நாட்டை வங்குரோத்து நாடாக மாற்றி மீண்டும் பாதாளத்துக்கு தள்ளுவதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர் என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

சர்வதேச நாணய நிதியம் நாடு சரியான முறையில் முன்னெடுத்து வருவதாக வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் தேசிய மக்கள் சக்திக்கு பன்மடங்காக ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. எனவே இந்த நாட்டை வளமான நாடாக மாற்றுவோம் என்றார்.