நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பணம் பறித்த கும்பல் கைது!

42 0

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த மூவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (16) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் மூவரும் ஒபநாயக்க மற்றும் இறக்குவானை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் புகைப்படங்களை முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டு அவர்களுக்கு பண உதவி வழங்குமாறு கோரி மக்களை ஏமாற்றி வங்கி கணக்கினை அனுப்பி பணம் பறித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட மூவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.