பாராளுமன்ற நூலகத்தின் பயன்பாட்டுக்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் கடந்த மாதம் 25ஆம் திகதி பாராளுமன்றத்தின் நூலகத்திடம் கையளிக்கப்பட்டன.
இதற்கமைய ‘வீதிப் பாதுகாப்புச் செயற்றிட்டம் 2025 – 2026’ என்ற புத்தகம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவினால் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேரவிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன், கடந்த காலங்களில் இடம்பெற்ற 6 பாரிய வீதி விபத்துக்கள் தொடர்பில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்னாயக்கவின் ஆலோசனைக்கு அமைய பாராளுமன்றத்தின் நூலகத்திற்கு வழங்கப்பட்டன.
இதற்கு அமைய, 2025.09.04ஆம் திகதி எல்ல – வெள்ளவாய வீதியில் கி.மீ 23 – கி.மீ 24 மைல் கல்லுக்கு இடையில் 24/6 மதகிற்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்து, 2025.06.21ஆம் திகதி பதுள்ளை – மஹியங்கனை வீதி திம்பிரிகஸ்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்து, 2025.05.11ஆம் திகதி நுவரெலியா – கண்டி வீதியில் கெரடியல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்து, 2024.11.01 ஆம் திகதி பதுளை – மஹியங்கனை வீதியில் அம்பகஹஓயவில் நடந்த வீதி விபத்து, 2023.01.20ஆம் திகதி நுவரெலியா – ஹட்டன் வீதியில் ரடெல்ல – சோமர்செட் மாற்று வீதியில் இடம்பெற்ற வீதி விபத்து, 2020.01.06ஆம் திகதி பசறை – மதுல்சீம வீதியில் மதுல்சீமை நோக்கி 06வது மைல்கலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இடம்பெற்ற வீதி விபத்துக் குறித்த அறிக்கைகளே இவ்வாறு பாராளுமன்ற நூலகத்திற்கு வழங்கப்பட்டன.






