தொழில் பாதுகாப்பற்ற நிலையில் 23 000 அரச ஊழியர்கள் – சஜித் பிரேமதாச

44 0

அரச சேவையை வலுப்படுத்துவோம், அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என வழங்கிய வாக்குறுதிகளை நம்பி, பெரும்பான்மையான அரச ஊழியர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த போதிலும், இன்று மின்சார சபையில் 23,000 பேரின் வேலைகள் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை தேர்தல் தொகுதியில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற ‘கிராமத்திற்கு கிராமம், வீட்டுக்கு வீடு’ எதிர்க்கட்சித் தலைவர் நடமாடும் சேவைத் திட்டத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதிகாரத்தில் இல்லாதபோது, மின்சார சபை ஊழியர்களின் வேலைகளைப் பாதுகாக்க உயிர் தியாகம் செய்யத் தயாராக இருந்த தொழிற்சங்கத் தலைவர்கள், தற்போது அதிகாரத்திற்கு வந்த பிறகு, மின்சார சபை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை விடுத்து, ஆட்சியைப் பாதுகாப்பதில் முனைப்புக் காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

அப்போது பெருமையாகப் பேசிய இந்தத் தலைவர்கள், இன்று அனைத்தையும் மறந்துவிட்டு, அரசாங்கத்தைப் பாதுகாக்க கடும் பிரயத்தனம் எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் இன்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது, என்று குறிப்பிட்ட எதிர்க்கட்சி தலைவர், விவசாயிகள், தொழில்முனைவோர், அரச ஊழியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரையும் அரசாங்கம் மறந்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

அரசாங்கத்தைப் பாதுகாக்க கொலை செய்யவும், உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாக அவர்கள் அச்சுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் மீதான இத்தகைய தாக்குதல்களை எதிர்கொண்டு மௌனமாக இருப்பதா அல்லது விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரச ஊழியர்களைப் பாதுகாக்க வீதியில் இறங்குவதா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும், என்று அவர் அழைப்பு விடுத்தார். இத்தகைய ஜனநாயகப் போராட்டத்திற்குத் தலைமை தாங்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். மக்களுக்குத் தரமான உரமோ, உர மானியங்களோ கிடைப்பதில்லை என்றும், களைக்கொல்லிகள் கூட தரம் குறைந்தவையாக இருப்பதாகவும் அவர் கூறினார். உயர்தர விதைகள், விவசாய உபகரணங்கள் மற்றும் அவற்றின் விலை அதிகரிப்பு ஆகியவற்றால் விவசாயிகள் சிரமப்படுவதாகவும், காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்குக்கூட காப்பீட்டு இழப்பீட்டு முறை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மக்களுக்காகப் போராடி அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தரத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உறுதியளித்தார்.