ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து பல அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் கொழும்பில் ஒன்றுகூடல்

51 0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படும் பல்வேறு அரசில் கட்சிகளின் இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை (26) கொழும்பில் ஒன்று கூட தீர்மானித்துள்ளனர்.

இந்த ஒன்று கூடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி,லங்கா ஜனதா கட்சி, சர்வஜன பலய, ஐக்கிய தேசியக் கட்சி,முற்போக்கு இளைஞர் இயக்கம் மற்றும் பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த  இளைஞர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

சிவில் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசில் கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (25) நடத்திய செய்தியாளர் சந்திப்பில்  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியி்ன் ஹோரா அமைப்பாளர் சரித் அபேசிங்க குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது, அதனால்  கூட்டு எதிர்க்கட்சி கோட்டை நீதவான் நீதிமன்றத்தை நோக்கி பேரணி செல்வதற்கு முன்பு கொம்பனித் தெருவில் ஒன்றுகூட திட்டமிட்டிருக்கிறது.  இது ஒரு தனிநபரைப் பற்றியது மட்டுமல்ல. மாறாக அரசியல் அடக்குமுறைக்கு எதிரான நடவடிக்கையாகும் என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் முன்னணியின் அழைப்பாளர் ஹேமந்த ஸ்ரீலால் குறிப்பிடுகையில்,

எமது ஒன்றுகூடலின் நோக்கம்  முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை பாதுகாப்பது மட்டுமல்ல, மாறாக ஜனநாயகக் கொள்கைகளைப் பாதுகாப்பதே இந்தப் போராட்டத்தின் நோக்கமாகும். இன்று ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் அடுத்ததாக இருக்கலாம்.

உள்நாட்டுப் போரின் மூலம் நாட்டை வழிநடத்திய ஒரு முன்னாள் தலைவர் அரசியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. இந்த  நடவடிக்கை தொடர்ந்தால், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூட பெலவத்தையில் உள்ள அவரது கட்சி தலைமையகத்துக்கு செல்வதை வரையறுக்கலாம் என்றார்.

சர்வஜன பலய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கருத்து தெரிவித்த டாக்டர் சாமர வணிகசூரிய குறிப்பிடுகையில், இந்த ஒன்று கூடல்  அரசியல் ஒடுக்குமுறைக்கு எதிரான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.  ஜனநாயக சுதந்திரத்தை  பாதுகாக்க நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம் என்றார்.