ரணில் விக்ரமசிங்க சிறையில் இருக்க வேண்டியவர். அதனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்குவோம். அதேநேரம் ரணிலை சிறையில் அடைத்தது போல் அவரின் பொருளாதார வேலைத்திட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அரசாங்கத்துக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என மக்கள் போராட்ட அமைப்பின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் லஹிரு வீரசேகர தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட இந்த அரசாங்கம் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஏனெனில், ரணில் விக்ரமசிங்கவினர் அதிகாரத்தில் இருக்கும் போது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாமல் செய்து செயற்பட்ட விதத்தை இந்த நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள். பட்டலந்த போன்ற வதைமுகாம்களை ஏற்படுத்திக்கொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு பல்வேறு வதைகளை கொடுத்து கொலை செய்தது ரணில் விக்ரமசிங்கவினராகும்.
மத்திய வங்கியில் கொள்ளையடித்து நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தள்ளியது ரணில் விக்ரமசிங்கவினராகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுவெடிப்பு இடம்பெறும் வரை பார்த்துக்கொண்டிருந்தவர்கள். அந்த ரணில் விக்ரமசிங்கவே இன்று சிறையில் இருக்கிறார். அதனால் ரணில் விக்ரமசிங்க கட்டாயமாக சிறைக்கு செல்ல வேண்டியவர் என்றே நாங்கள் நினைக்கிறோம். ரணில் விக்ரமசிங்கவுடன் ராஜபக்ஷவினர், சந்திரிக்கா, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்தே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
நாட்டு மக்கள் இந்த ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளை 2022 மக்கள் போராட்டத்தின் போதும் அதன் பின்னர் வந்த தேர்தல்களின்போதும் நிராகரித்திருந்தனர். இவ்வாறு மக்களால் நிராகரிக்கப்பட்ட மக்கள் விரோதியான ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்க இப்போது அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவினர், சந்திரிக்கா, மைத்திரிபாலவினர் என அனைவரும் ஒரு மேடைக்கு வந்து ரணிலுக்காக குரல்கொடுத்து வருகின்றனர். சஜித் பிரேமதாசவும் ரணிலை பாதுகாக்க செயற்பட்டு வருகிறார். இவர்கள் அனைவரும் இந்த நாட்டின் வளங்களை அழிப்பதற்கும் பொதுமக்கள் சொத்துக்களை திருடுவதற்கும் ஆதரவளித்த குற்றவாளிகள். அதனால் இவர்கள் அனைவரையும் ஒரே கூடையில் போட்டு புதைத்துவிடுவதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும்.
சட்ட மா அதிபர் திணைக்களம், அரசாங்கம் மக்களின் பக்கம் இருப்பதால், நாளை (இன்று) ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை கிடைக்க முடியாது. ஏனெனில், ரணில் விக்ரமசிங்கவை சிறைப்படுத்தி இருக்கும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தை பயன்படுத்தியே ராஜபக்ஷவினரும் ரணில் விக்ரமசிங்கவினரும் எங்களையும் சிறைப்படுத்தி இருந்தார்கள். பொலிஸாரும் எங்களுக்கு எதிராகவே நீதிமன்றில் சாட்சியமளித்தார்கள்.
தற்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கில் பொலிஸார், சட்ட மா அதிபர் திணைக்களம் எவ்வாறு செயற்படப்போகிறார்கள் என்பதை நாங்கள் பார்க்கிறோம். ரணில் விக்ரமசிங்க பல தவறுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய ஒருவர். அதனால் அவருக்கு பிணை வழங்குவதற்கு நாங்கள் எதிர்ப்பு என பொலிஸார் இன்றைய தினம் நீதிமன்றில் தெரிவிக்க வேண்டும். இத்துடன் நின்றுவிடாமல் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தெரிவிக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு, அவரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கவேண்டும். அதனால் அரசாங்கம் தற்போது எடுத்திருக்கும் நடவடிக்கையில் இருந்து பின்வாங்கக்கூடாது என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் ரணில் விக்ரமசிங்கவை சிறையில் அடைப்பது மாத்திரம் போதுமானதல்ல. ரணில் விக்ரமசிங்க பின்பற்றிவந்த மக்கள் விரோத பொருளாதார கொள்கையுடனே அவரை தோற்கடிக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியவாத புதிய லிபரல்வாத கொள்கை தொடர்ந்தும் இந்த நாட்டில் செயற்படுத்துவதற்கு இடமளிக்கக்கூடாது. அதனால் ரணில் விக்ரமசிங்கவை சிறைப்படுத்தியது போன்று அவரின் பொருளாதார திட்டங்களையும் நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

