காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி 30ஆம் திகதி வடக்கு, கிழக்கில் போராட்டம் ஏற்பாடு

65 0

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, எதிர்வரும் 30ஆம்  திகதி வடக்கு, கிழக்கில் மாபெரும் ஆர்ப்பாட்டம்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம், அதனை வலுப்படுத்த பேதங்களற்ற வகையில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (25) நடத்திய ஊடக சந்திப்பில்   மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஐ.நா பிரதிநிதி யாழ்ப்பாணத்துக்கு  வந்து செம்மணியின் தடயங்களை பார்வையிட்டார். அவரது இந்த செயலால், நீதிக்கான  சமிக்ஞை கிடைக்கும் என நம்பினோம்.  ஆனால் அத்தனையும் கலைந்துவிட்டது.

ஐ.நாவின் பிரதிநிதி உள்ளக பொறிமுறையை எம்மிடம் திணித்துச் சென்றதைப் போன்று அவரது கருத்து இருக்கிறது.

நாம் சர்வதேச விசாரணையையே கோருகின்றோம். அதனையே இன்றும் வலியுறுத்துகின்றோம். எனவே, எமக்கு உள்ளக பொறிமுறை வேண்டாம். அதில் எமக்கு நம்பிக்கை இல்லை.

எனவே, எதிர்வரும் 30ஆம் திகதி செம்மணியில் போராட்டம் ஒன்றை வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளோம்.

அந்தப் போராட்டத்துக்கு மதத் தலைவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என அனைவரும் பேதங்களற்ற வகையில் ஒன்றுதிரண்டு போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்கள்.