கொழும்பு, வெல்லம்பிட்டி, கிட்டம்பஹுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் முல்லேரியா பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வெல்லம்பிட்டி, கிட்டம்பஹுவ பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இரண்டு நபர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.
இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை முல்லேரியா பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

