கிளிநொச்சியில், தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்(காணொளி)

303 0

 

கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் கணவன் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார்.

ஹோட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த தம்பதியினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

ஹோட்டலின் குத்தகைக்காலம் முடிவடைந்த நிலையில், குறித்த தம்பதியர் ஹோட்டலை ஒப்படைத்து விட்டு, ஹோட்டல் உரிமையாளரிடம் முற்பணத்தை கோரியுள்ளனர்.

அதன்போது இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஹோட்டல் உரிமையாளர், மேற்படி தம்பதியர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது உதயநகர் மேற்கு, 30 வீட்டுத்திட்டம் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நாகராசா திருக்குமார் என்பவர் உயிரிழந்துள்ளதுடன், 40 வயதுடைய அவரது மனைவி திருக்குமார் கிருஷ்ணவேணி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.