முத்தையன்கட்டு இளைஞனின் மரணத்திற்கு நடுநிலையான விசாரணை தேவை ; காவிந்த ஜயவர்தன

42 0

முத்தையன்கட்டு பகுதி இளைஞன் மரணம் குறித்து அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அதிபாதுகாப்பு வலயமாக இராணுவத்தால் அடையாளப்படுத்தப்படுவது நாட்டின் நல்லிணக்கத்துக்கும்,சகவாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வைத்தியர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மையை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கத்தோலிக்க சபைக்கும், நாட்டு மக்களுக்கும் தொடர்ச்சியாக வாக்குறுதி வழங்கியுள்ளார்.

குண்டுத்தாக்குதல் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்த விசாரணைகளை அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் தான் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்துள்ளோம்.

பிரதி பாதுகாப்பு அமைச்சரின் விடயதானங்கள் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படாத காரணத்தால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர  முடியாது என என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுகின்றனர்

ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது பாதுகாப்பு பதில் அமைச்சராக அருண ஜயசேகர பதவி வகித்துள்ளார்.

ஆகவே இவவிடயத்தில் அவரது விடயதானம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என்று ஆளும் தரப்பினரால் குறிப்பிட முடியாது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த இளைஞன் மரணத்தை அடியொற்றியதாக இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இளைஞனின் மரணம் தொடர்பில் அரசாங்கம் நடுநிலையான முறையில் விசாரணை செய்து  உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும்.

யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அதிபாதுகாப்பு வலயமாக இராணுவத்தால் அடையாளப்படுத்தப்படுவது நாட்டின் நல்லிணக்கத்துக்கும்,சகவாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.