கடற்றொழில் சமூகத்திற்காக ‘சயுர’ விசேட ஆயுள் காப்புறுதித் திட்டம் அறிமுகம்

56 0
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் தலைமையில், கடற்றொழில் சமூகத்தின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் ‘சயுர’ விசேட ஆயுள் காப்புறுதித் திட்டம் இன்று (14) குடாவெல்லையில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நிஹால் கலப்பத்தி, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத், விவசாய காப்புறுதி சபையின் தலைவர் பேமசிறி ஜாசிங்காராச்சி, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் சமூகத்தினர் கலந்துகொண்டனர்.

பிரதி அமைச்சர் ரத்ன கமகே தனது பிரதான உரையில், கடற்றொழில் சமூகத்தினர் எதிர்கொள்ளும் அபாயங்கள் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாழும் சவால்களை சுட்டிக்காட்டினார். 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது கடற்றொழில் சமூகத்திற்கு வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதியான ஆயுள் காப்புறுதித் திட்டத்தை ஸ்தாபித்தல் இன்று குடாவெல்லையில் யதார்த்தமாகியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த புதிய காப்புறுதித் திட்டத்தின் மூலம், இதுவரை இல்லாத சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என்றும், 1.2 மில்லியன் ரூபா முதல் 2 மில்லியன் ரூபா வரையிலான சலுகை மட்டங்களின் கீழ், ஏதேனும் ஊனம், பகுதி அல்லது முழுமையான செயலிழப்பு, மரணம் அல்லது காணாமல் போதல் போன்ற சந்தர்ப்பங்களில் கூட நிவாரணம் கிடைக்கும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இதன்மூலம், கடற்றொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்கும் உண்மையான பாதுகாப்பும், ஆயுள் காப்புறுதியும் கிடைக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த ஆண்டு நவம்பர் 22ஆம் திகதி சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தில் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.