மட்டக்களப்பில் ரயில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

64 0

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் நின்று கைதொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது ரயில் மோதியதில்  ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10)  இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஊறணியைச் சேர்ந்த 23 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த நபர்  மனைவியுடன் ஏற்பட்ட சண்டையினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு தண்டவாளத்தில் நின்று கொண்டு மனைவியுடன் தொலைபேசியில் பேசி சண்டைபிடித்துக் கொண்டுள்ள நிலையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்த ரயிலில் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சடலத்தை மீட்டு ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு ரயில் கொழும்பு நோக்கி பிரயாணித்தது.

இது தொடர்பாக ஏறாவூர் மற்றும் கொக்குவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.