வத்தளையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை கொலை ; மேலும் மூவர் கைது

40 0

வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹேகித்த பிரதேசத்திற்கு கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் சென்ற கும்பல் ஒன்று மாடி வீடொன்றில் ,இருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேக நபர்கள் களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (05) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 17, 25 மற்றும் 27 வயதுடையவர்கள் ஆவர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வத்தளை – ஹேகித்த பிரதேசத்திற்கு கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் சென்ற கும்பல் ஒன்று மாடி வீடொன்றில் இருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளது.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய இளைஞன் ஒருவன் 4 வாள்களுடன் வத்தளை அவரகொட்டுவ பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை (04) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தளை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.