கொழும்பில் இல.155 பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

70 0

கொழும்பில் நிறுத்தப்பட்டிருந்த இல. 155 பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி காலை 5.30 மணி முதல் இல.155 இலக்க பேருந்துகள் மட்டக்குளி தொடக்கம் நகர மண்டபம் (town hall) வரை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஆலோக கருணாரத்ன தலைமையில் வடகொழும்பு நகர சபை உறுப்பினர்கள் பங்குபற்றிய கலந்துரையாடலொன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் நடைபெற்றது.

இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்களாவன:

நீண்டகால தேவையாகவும் கோரிக்கையாகவும் இருந்து வந்த வட கொழும்பின் பிரதான மார்க்கங்களில், குறிப்பாக மட்டக்குளி தொடக்கம் சொய்சாபுர வரை செல்லும் 155 இலக்கப் பேருந்து சேவை சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.

பின்னர் வடகொழும்பு நகர சபை உறுப்பினர் பிற நகரசபை உறுப்பினர்களின் தீவிர முயற்சியால் ஒரு சில பேருந்துகள் அவ்வீதியில் ஈடுபடுத்தப்பட்டன.

இருப்பினும், குறித்த பகுதியில் வாழும் பொதுமக்கள் இவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மாநகர சபை அமர்வுகள் மற்றும் பிற அபிவிருத்திக் கூட்டங்களின் இவர்கள் தொடர்ச்சியாக இந்த பேருந்தின் தேவைகள் தொடர்பில் எடுத்துக்கூறியதுடன் அதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தி இருந்தனர்.

அதன் பயனாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் அதன் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்வரும் 11ஆம் திகதி காலை 5.30 மணி முதல் 155 இலக்க பேருந்து சேவையானது மட்டக்குளி தொடக்கம் நகர மண்டபம் (town hall) வரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த பேருந்து சேவையினை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் இணைந்து தொடர்ச்சியாக வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் வடகொழும்பு நகர சபை உறுப்பினர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.