எழுமாறாக எடுக்கப்பட்ட 20 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் ஏனைய எண்ணெய் வகைகள் கலக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ள நிலையில் நுகர்வோர் தேங்காய் எண்ணெய் கொள்வனவு செய்யும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டுமென நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.
நுகர்வோர் அதிகார சபையின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
உணவுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்யில் ஏனைய எண்ணெய் வகைகள் கலக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.இந்த விடயம் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியது.
இதற்கமைய 25 மாவட்டங்களிலும் சந்தைகளில் இருந்து எழுமாறாக 75 எண்ணெய் மாதிரிகளை பெற்றுக்கொண்டு அவற்றை ஆய்வு செய்தோம்.இவற்றில் 70 மாதிரிகளின் பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 20 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் ஏனைய எண்ணெய் வகைகள் கலக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எண்ணெய் மாதிரிகளில் ஏனைய எண்ணெய் வகைகள் கலந்து அவற்றை விற்பனை செய்த நிறுவனங்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.மீகொட மற்றும் குளியாப்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒருசில தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் தரமற்ற எண்ணெயை சந்தைக்கு விநியோகிப்பது கண்;டறியப்பட்டது.
நுகர்வோர் தேங்காய் எண்ணெய் கொள்வனவு செய்யும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டும். தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனம் மற்றும் ஏனைய பொது தகவல்கள் குறித்து விழிப்புடன் இருத்தல் வேண்டும். தரமான தேங்காய் எண்ணெயை சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் தெங்கு அபிவிருத்தி சபையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

