மன்னார் கடற்பரப்பில் 14 இந்திய மீனவர்கள் கைது

62 0

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகள் பத்தலங்குண்டுவ மற்றும் மன்னாரின் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பத்தலங்குண்டுவ கடல் பகுதியிலும் மன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியிலும் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 14 இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகள் இரண்டும்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், உள்ளுர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நடவடிக்கைகளின் மூலம், 02 இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் அதில் இருந்த 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, கல்பிட்டி மற்றும் தலைமன்னார் படகுத்துறைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி மற்றும் தலைமன்னார் உதவி மீன்வள ஆய்வாளர் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.