பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நாமல் இன்று நாடு திரும்பினார் !

57 0

அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

ஆனால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்படவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கு சென்ற அதே விமானத்திலேயே நாமல் ராஜபக்ஷவும் தனிப்பட்ட தேவைக்காக நேற்று திங்கட்கிழமை (28) வெளிநாடு சென்றிருந்தார்.

2017 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட குற்றத்திற்காக நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் மீண்டும் அழைக்கப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்தமையினால் அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் நாமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் காலை வெளிநாடு சென்றதால், அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்து, இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.