கிளிநொச்சி வலய கல்விப் பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் விசேடமாக விஞ்ஞானம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் ( ஐ.சி.டி) போன்ற பாடங்களுக்கு அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (25) கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்த நிலையிலேயே அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இதன்போது அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி வலயக் கல்வி பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதில் விசேடமாக விஞ்ஞானம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் (ஐ.சி.டி) போன்ற பாடங்களுக்கு அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
இது மட்டுமின்றி சில பாடசாலைகள் நடத்த முடியாத அளவிலே ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதற்கு ஒர் தீர்வும் வழங்கப்படாத நிலைமை காணப்படுகின்றது. கிளிநொச்சி வலயத்தில் மாத்திரம் 75 பேர் இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர்.
ஆனால் 35 புதிய ஆசிரியர்களே அங்கு கடமைக்கு திரும்பி வந்துள்ளனர். இதேபோன்று முல்லைத்தீவு துணுகாய் வலயம் போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. அது மட்டுமின்றி கல்வியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வளங்களும் பற்றாக்குறையாக காணப்படுகின்றன.
வடமாகாண ஆளுநருகு்கு இது தொடர்பான முழுமையான அதிகாரங்கள் காணப்படுகிறது. எனவே இதற்கான உரிய தீர்வினை அவர்களே எடுக்க வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கே கிளிநொச்சி பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



