மாலைதீவு செல்கிறார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

65 0

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை (28) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மாலைதீவுக்கு செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் மாலைதீவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைகிறது.

1965 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி இரு நாடுகளுக்கும்  இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்து  60வது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு கொண்டாடுவதால், இந்த உத்தியோகபூர்வ விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைதீவு – இலங்கைக்கு இடையிலான சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒப்பந்த பேச்சுவார்தையும் நடத்தப்படவுள்ளது.