தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் : ஓகஸ்ட் 5ஆம் திகதி விவாதம்

77 0
image

பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதத்தை ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (25) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய ஓகஸ்ட் மாதம் 05,06 மற்றும் 07ஆம் திகதிகளில் கூடவுள்ளது. ஓகஸ்ட் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை போயா தினம் என்பதால் அன்று பாராளுமன்றம் கூடாது.

 

 

அதற்கமைய, ஓகஸ்ட் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை  2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பி.ப 4.00 மணிக்கு இதற்கான வாக்கெடுப்பை நடத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மற்றும் நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி என்பவற்றை விவாதித்து நிறைவேற்றுவதற்கு பி.ப 4.15 மணி முதல் பி.ப 5.30 மணி வரையான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் பி.ப 5.30 மணி முதல் பி.ப 6.00 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

அதற்கமைய, ஓகஸ்ட் 06ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணிவரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாவது மதிப்பீடு), புகையிலை வரிச் சட்டத்தின் கீழான கட்டளை, தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.

இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரையான நேரம் ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

ஓகஸ்ட் 07ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டமூலத்தை (இரண்டாவது மதிப்பீடு) விவாதம் இன்றி நிறைவேற்றவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இதன் பின்னர் நண்பகல் 12.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மீதான ஒத்திவைப்பு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.