‘மனித வாழ்க்கையில், நாம் தோல்வி, ஏமாற்றம் மற்றும் துரோகங்களை எதிர்கொள்ளலாம், ஆனால் அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை. நான் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்’ என்று மாநிலங்களவையில் பிரியாவிடையின்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார்.
மாநிலங்களவையில் இன்று 24,07.2025 நடைபெற்ற பிரியாவிடையின்போது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரை: இந்தப் பெருமை மிக்க அவையின் பணிக்காலம் நிறைவடைந்த நிலையில் உங்களிடமிருந்து விடைபெற எனக்கு வாய்ப்பளித்த இங்குள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.என் மீது எப்போதும் பாசத்தையும், மரியாதையையும் காட்டிய முன்னாள் அவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.
1978, 1984 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் இந்த பெருமைமிகு அவைக்கு என்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய கருணாநிதிக்கு என் நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகின்றேன். 2019 ஆம் ஆண்டில் இந்த மேலவைக்கு என்னை தேர்ந்தெடுத்து அனுப்பியதற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

