3 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது

35 0

3 கோடியே 11 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (16) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு – மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய வர்த்தகர் ஆவார்.

சந்தேக நபரான வர்த்தகர் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் இருந்து இந்தியாவின் மும்பை நகரத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து  இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பின்னர் சந்தேக நபரான வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தின்  ( Red Channel ) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரான வர்த்தகர் கொண்டு வந்த பயணப்பொதிகளில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த  03 கிலோ 117 கிராம்  குஷ் போதைப்பொருள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட வர்த்தகர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.