இலங்கையின் சுகாதாரத்துறை முன்னேற்றம் மற்றும் ஊடக துறையின் மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (10) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி ஜே. சங் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்குவதற்கான திட்டம் அமெரிக்க நன்கொடையாளர்களின் மூலமாக முன்னெடுக்கப்படும் என அமெரிக்க தூதர் உறுதியளித்தார்.
சந்திப்பின் போது, நாட்டில் நிலவும் மருந்துப் பற்றாக்குறை, அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் சவால்கள், மற்றும் அவற்றுக்கு முன்னெடுக்கப்படும் தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அத்துடன், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் தொடர்பான குறுகிய கால, நீண்டகாலத் திட்டங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் முறை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இவ் நோய்களை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றும், மருந்துப் பற்றாக்குறையை தவிர்க்க அரசு நிர்வாகத்தில் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் ஊடகத் துறையை மேம்படுத்தும் புதிய ஊடகக் கொள்கை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினருக்கான தேசிய ஊடக நிறுவனம் ஒன்றை நிறுவும் திட்டமும் இடம்பெறுவதாக அமைச்சர் கூறினார்.
அத்துடன், பத்திரிகையாளர்களுக்கான பயிற்சித் திட்டங்களை அமெரிக்க தூதருடன் இணைந்து செயல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
1973 ஆம் ஆண்டு அமெரிக்க நன்கொடையாக நிறுவப்பட்ட திரிபோஷா நிறுவனத்தின் தற்போதைய முன்னேற்றங்களை நினைவுகூர்ந்த அமைச்சர், அமெரிக்க அரசு வழங்கிய தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
இதனையடுத்து, இலங்கையின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்காக, நிதி, தொழில்நுட்பம், அறிவு மற்றும் பௌதீக ஆதரவை வழங்க அமெரிக்கா தொடர்ந்து தயாராக உள்ளது என தூதர் ஜூலி ஜே. சங் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பில், இரு தரப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.




