வருமான வரித்துறை தெரிவித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?: தமிழிசை

373 0

வருமான வரித்துறை வெளியிட்ட பட்டியலில் உள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தின் மற்றொரு பகுதி தொடங்கப்படுகிறது. தமிழக மின்சாரத்துறைக்கு ரூ.85 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு பல்வேறு உதவிகளை செய்து, பக்கபலமாக இருப்பது என மத்திய அரசு கொள்கையாக கொண்டு உள்ளது.

பிரதமர் மோடி இலங்கை பயணம் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களால் பாராட்டப்படுகிறது. தமிழகம் மீது மத்திய அரசு பாரபட்சமாக இருக்கிறது என்று அடிப்படை ஆதாரமற்ற விமர்சனங்களை சொல்பவர்கள் இலங்கையில் பிரதமர் மோடியின் பேச்சை கேட்டு தவறு என உணர்ந்து இருப்பார்கள்.

கவர்னர் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பதை மறுக்கிறேன். முழுநேர கவர்னர் இருந்தால் தான் அக்கறை செலுத்துவார் என கூறமுடியாது. அரசியலமைப்பு சட்டப்படி 2 மாநிலங்களை கவர்னர் நிர்வகிக்கலாம். நிர்வாக ரீதியாக கவர்னர் எந்த குறைபாடும் வைக்கவில்லை.

மாநிலத்தில் தவறுகள் நடக்கும்போது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. வருமான வரித்துறை அமைச்சர்கள் மீது சந்தேகம் இருப்பதாக வெளியிட்ட பட்டியல் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர்கள் காமராஜ், சரோஜா ஆகியோர் மீதும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

பாரதிய ஜனதா ஆட்சி நிர்வாகத்தில் ஊழல் செய்பவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.