ஒட்டுசுட்டானில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்புக்கு பொலிஸாரே காரணம்!

113 0

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளுக்கு பொலிஸாரே காரணமென தெரிவித்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றதில்லை என்றும்  விடுதலைப்புலிகள் முறையாக சட்டம் ஒழுங்கினைப் பாதுகாத்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (3) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற முன்மொழிவொன்றையும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் முன்வைத்தார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே ரவிகரன் இதனை குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மிக அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்ற நிலையே காணப்படுகிறது.

இவ்வாறு இங்கு சட்டவிரோத செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றபோது, சட்டம் ஒழுங்கு முறையாக பேணப்படுவதாக பொலிஸாரோ, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டிய ஏனைய தரப்பினரோ போலிக் கருத்துக்களை இங்கு தெரிவித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை.

தற்போது இந்த நாட்டில் ஆட்சிபீடத்திலுள்ள அரசும் அரசுத் தலைவர்களும் கூட இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமெனக் கூறுகின்றனர்.

நாமும் சட்டம் ஒழுங்கு முறையாகப் பாதுகாக்கப்படவேண்டும் என்றே தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்.

ஆனால் இங்கு சட்டம் ஒழுங்கு சீரின்றியே காணப்படுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிஸார் மீதே நாம் குற்றச்சாட்டு முன்வைக்கவேண்டியுள்ளது.

பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையினாலேயே இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வுகள் உட்பட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

ஆனால், விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான மணல் அகழ்வுச் செயற்பாடுகளோ கசிப்பு, கஞ்சா முதலான சட்டவிரோத போதைப்பொருட்களோ எவையும் இருக்கவில்லை. விடுதலைப்புலிகள் முறையாக சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தனர். அதனை யாரும் மறுக்கமுடியாது என்றார்.