முகமது நபியை சித்தரிக்கும் கருத்தோவியத்திற்கு துருக்கியில் கடும் எதிர்ப்பு

80 0

முகமது நபியையும் மோயீசனையும் சித்தரிக்கும் கருத்தோவியங்களை வரைந்த நான்கு கருத்தோவியக் கலைஞர்களை துருக்கி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கருத்தோவியங்களிற்கு  எதிராக கடும் ஆர்ப்பாட்டங்கள் மூண்டதையடுத்தே துருக்கி பொலிஸார் கருத்தோவிய  கலைஞர்களை கைதுசெய்துள்ளனர்.

அரசியல் சஞ்சிகையொன்றில் வெளியான  இந்த கருத்தோவியத்தில்   குண்டுகள் விழும்போது, இறக்கைகள் மற்றும் ஒளிவட்டங்களுடன் காணப்படும் இஸ்லாமியர் ஒருவரும் யூதரும் கைகுலுக்கிக்கொள்வதை காணமுடிகின்றது.

வெளியாகி நான்கு நாட்களின் பின்னர் இந்த கருத்தோவியம் சமூக ஊடகங்களில் பரவலானது.இதனை தொடர்ந்து இஸ்தான்புலில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என கோஷமெழுப்பினர்.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அரசியல் சஞ்சிகையின் நடவடிக்கை குறித்து துருக்கி அதிகாரிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இந்த கருத்தோவியம் ஒரு தூண்டும் நடவடிக்கை என தெரிவித்துள்ள துருக்கியின் உள்நாட்டு விவகாரங்களிற்கான அமைச்சர் அலி யெர்லிகயா இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன்னால் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

கேலிச்சித்திரம்  கருத்து சுதந்திரத்தினால் அல்லது பேச்சு சுதந்திரத்தினால் பாதுகாக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.