வடக்கிலுள்ள காணிகளைக் கபளீரகம் செய்யும் வர்த்தமானியை இரத்துச்செய்தது அரசாங்கம்

74 0

வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவற்றை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், அரசாங்கத்தினால்  வெள்ளிக்கிழமை (27)  இரவு வெளியிடப்பட்ட 2443 எனும் இலக்க வர்த்தமானியின் ஊடாக இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

காணிகளைக் கையகப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில், 2430 இலக்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத்தடையுத்தரவை அடுத்தே அரசாங்கத்தினால் மேற்குறிப்பிட்ட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகனடப்படுத்தப்படும் என அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் அவ்வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக வாபஸ் பெறவேண்டும் எனக்கோரி வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்து, அவ்வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை இரத்துச்செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல்  வெள்ளிக்கிழமை மாலை வரை வெளியிடப்பட்டிருக்கவில்லை.

அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப்பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது காணி அமைச்சர் லால்காந்தவினால் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு இம்மாதம் 3 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின்போது இவ்விவகாரம் பற்றி எந்தவொரு விசேட கூற்றும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் கடந்த 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில், அதுகுறித்த விசாரணைகள் முடிவடைந்து இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் வரை வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட 2430 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத்தடை விதிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவையின் அறிவுறுத்தலைப் பெறுவதற்கு சட்டமா அதிபர் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் கோரியிருந்தார். அதனைத்தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அரசின் முடிவை அறிவிப்பதற்கு மீண்டும் 27 ஆம் திகதி வரை கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்வழக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 2430 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியைத் தற்காலிகமாக வலிதற்றதாக்கும் வகையில், அவ்வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட, சம்பத் அபயக்கோன் மற்றும் சம்பத் விஜயரட்ன ஆகிய மூவரடங்கிய நீதியரசர் குழாம் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பித்தது.

அத்தோடு இவ்வழக்கு விசாரணைகள் மீண்டும் எதிர்வரும் ஜுலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெறும் எனவும், அதற்கிடையே 2430 இலக்க வர்த்தமானியை இரத்துச்செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிடுமாயின், அதனை மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதியரசர் குழாம் உத்தரவிட்டது.

இந்நிலையில் காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தினால் வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட 27.06.2025 ஆம் திகதியிடப்பட்ட 2443 இலக்க வர்த்தமானியின் ஊடாக 1931 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 2025 மார்ச் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2430 இலக்க வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

‘இவ்வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ள வரைபடப் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளையும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் காணி உரித்தாளர்களுக்கு போதுமான சந்தர்ப்பத்தை வழங்குவதைக் (காணிகளை உரிமை கோருவதற்கு) கருத்திற்கொண்டும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானத்துக்கு அமைவாக 28.03.2025 ஆம் திகதியிடப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்படுகிறது’ என நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட 2443 இலக்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.