பிரான்சில், ஒட்டகம் வளர்க்கும் விவசாயி ஒருவர் பிரபலமாகிவருகிறார்.பிரான்சிலுள்ள Feignies என்னும் கிராமத்தில் வாழ்ந்துவருகிறார் ஜூலியன் (Julien Job, 43).
எல்லோரும் ஆடு, மாடுகளை வளர்த்து அவற்றிலிருந்து கிடைக்கும் பால், பாலாடைக்கட்டி முதலான பொருட்களை விற்றுக்கொண்டிருக்க, வித்தியாசமான ஒரு விடயத்தைச் செய்துவருகிறார் ஜூலியன். ஆம், 80 ஒட்டகங்களை வளர்த்துவரும் ஜூலியன், அவற்றின் பால் மற்றும் பாலாடைக் கட்டிகளை விற்பனை செய்துவருகிறார்.
பிரான்சில் இப்படி பால் மற்றும் பாலாடைக் கட்டிகளை விற்பனை செய்ய முறைப்படி ஐரோப்பிய ஒன்றிய சுகாதார ஏஜன்சிகளின் அனுமதி பெற்ற முதல் விவசாயி ஜூலியன்தான்.
பசும்பாலை விட ஐந்து மடங்கு அதிக இரும்புச் சத்தும், வைட்டமின் Cயும் கொண்ட ஒட்டகப்பால், லாக்டோஸ் ஒவ்வாமை கொண்டவர்களாலும் எளிதில் ஜீரணிக்கப்படக்கூடியதாகும்.

மேலும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஒட்டகப்பால் சிறந்ததாகும். அத்துடன், புற்றுநோய் செல்கள் மீது தாக்கம், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் மற்றும் ஆட்டிஸக் குறைப்பாட்டுக்கும் ஒட்டகப்பால் நல்லது என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சமீப காலமாக ஒட்டகப்பாலுக்கான டிமாண்ட் உலக அளவில் அதிகரித்துவரும் நிலையில், பிரான்ஸ் விவசாயியான ஜூலியன் கவனம் ஈர்த்துவருகிறார்.

