மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் ஒரு தொகுதி பீடி இலைகளுடன் வௌளிக்கிழமை (06) கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைவாக கடற்படை மற்றும் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் பீடி இலைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு படகுகளில் காணப்பட்ட பொதிகளை சோதனை செய்த போது குறித்த படகுகளில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பீடி இலைகளை கைப்பற்றப்பட்டன.
குறித்த இரு படகுகளில் இருந்தும் 40 மூடைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 1250 கிலோ பீடி இலைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பீடி இலை மூடைகள் கடற்படையின் உதவியுடன்,மன்னார் மது வரி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகளின் வெளி இணைப்பு இயந்திரங்கள் மற்றும் ஏனைய பொருட்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களையும் கடற்படையினர் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

