பகிடிவதைகளுக்கு எதிராக செயலணி ஒன்றை அமைக்க நடவடிக்கை!

49 0

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பகிடிவதைகளை தடுப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பகிடிவதைகளுக்கு எதிராக செயலணி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என  கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பல்கலைகழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பிலும் இது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்றும் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ திஸாநாயக்கவால் பிரதமரிடத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

1978/16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் நாட்டில் அமைந்துள்ள 17 பல்கலைக்கழகங்களில் எந்த பல்கலைக்கழத்திலும் பகிடிவதைகள் தடைச் சட்டத்தின் கீழ   கடந்த 5 வருடங்களில் எவ்வித வழக்கும் தொடரப்படவில்லை.

இதேவேளை உயர் கல்வி நிலையங்களில் பகிடிவதைகளை தடுப்பதற்காக எம்மால் பல்வேறு வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆண், பெண் சமத்துவத்துக்கான மத்திய நிலையத்தால் கீழ் வரும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான முதலாவது சட்ட வரைபு 2024 ஆகஸ்ட் மாதத்தில் உயர்நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கொன்றின் யோசனைகளாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆண், பெண் சமத்துவத்துக்கான மத்திய நிலையத்தால் நிலையான குழுவால் 2025 ஏப்ரல் 25ஆம் திகதி உயர்கல்வி அமைச்சுக்கு யோசனையொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள பகிடிவதைகள் மற்றும் ஆண், பெண் சமத்துவம் தொடர்பான துன்புறுத்தல்கள் சம்பந்தமாக சுற்றுநி ரூபத்தை முழுமையாக மறுசீரமைப்புக்கு உள்ளாக்கி அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் முறைப்பாட்டு செயற்பாட்டு பொறிமுறையை மிகவும் பலப்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன. இப்போதுள்ள துரித தொலைபேசி இலக்கத்தை 24 மணிநேரமும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன் சகல பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறும் பகிடிவதைகளுக்கு எதிரான செயலணியை அமைத்து ஆண், பெண் சமூக சமத்துவ குழுவின் கீழான இணைக்குழுக்களின் ஊடாக வலையமைப்புகளை உருவாக்கி எந்தவொரு பகிடிவதை தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கும் பொறிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றை செயற்படுத்துவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விசேட குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.