தென்மேற்கு பருவ பெயர்ச்சியால் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அம்பாந்தோட்டை, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு 3 வீடுகள் முழுமையாகவும், 365 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை கடந்த 27ஆம் திகதி புத்தளம் ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வியாழக்கிழமை (29) இரவு தெமட்டகொடை பிரதேசத்தில் தொழிற்சாலையொன்றின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண்கள் இருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலநிலை
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமையின் (2) பின்னரே காலநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதன் போது கடலோரப் பகுதிகளில் மணிக்கு 30 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடும் காற்று
கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் காற்றுடனான மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதோடு, மின் கம்பங்களும் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பெரும்பாலான பிரதேசங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பில் பொரளை – லெஸ்லிவனகல மாவத்தை, கிரான்பாஸ், பம்பலப்பிட்டி, தெமட்டகொடை, மருதானை, ஜாவத்தை மற்றும் வெள்ளவத்தை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறு மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
போக்குவரத்து பாதிப்பு
கொழும்பு – குருணாகல் பிரதான வீதியில் மினுவாங்கொட – அம்பஹா சந்தியில் மரமொன்று முறிந்து விழுந்ததால் அவ்வீதியூடான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன. ஜாஎல – மாதவிட்ட வீதி, குருணாகல் – படகமுவ வீதி, கினிகத்தேனை – நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதி, அநுராதபுரம் – கல்நேவ உள்ளிட்ட வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தமையால் சில மணித்தியாலங்கள் அவ்வீதிகள் ஊடான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன.
மின் தடை
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் மொத்தம் 29,015 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக மின்சாரசபை தெரிவித்துள்ளது. மீட்பு செயல்முறையை விரைவுபடுத்த பழுதுபார்க்கும் குழுக்கள் பல பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனுமொரு பிரதேசத்தில் மின் தடை ஏற்பட்டால் 1987 என்ற இலக்கத்துக்கு அழைத்து தகவல் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத சேவைகளில் தாமதம்
தண்டவாளங்களில் மரங்கள் முறிந்து விழுந்தமை, மண்மேடு சரிந்து விழுந்தமை என்பவற்றால் நேற்றைய தினம் பல புகையிரத சேவைகள் தாமதமடைந்தன. அதற்கமைய பிரதான புகையிர பாதை, களனிவெளி புகையிரத பாதை, புத்தளம் புகையிரத பாதை உள்ளிட்டவற்றின் ஊடான புகையிரத சேவைகள் இவ்வாறு தாமதமடைந்திருந்தன.
நடுக்கடலில் சிக்கிய மீனவர்கள்
பலப்பிட்டி கடற்பகுதியில் மூன்று மீனவர்கள் மீன்பிடிப்படகுடன் கடல் கொந்தளிப்பில் சிக்கிக் கொண்டனர். குறித்த மீனவர்கள் விமானப்படையினரால் உலங்கு வானூர்தியினால் மீட்கப்பட்டனர். இரத்மலானனையிலுள்ள விமானப்படை தளத்திலிருந்து பெல் 412 உலங்கு வானூர்தி மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, நடுக்கடலில் சிக்கியிருந்த மூன்று மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
சிலாபம் தொடக்கம் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும், காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றராகக் காணப்படும். எனவே குறித்த கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

