சட்டத்தை மீறி ஜனாதிபதியால் செயற்பட முடியாது – நிரோஷன் பாதுக்க

87 0

நிறைவேற்றதிகாரத்துக்கு சவால் விடுக்கும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இந்த தேர்தல் சட்டத்தை உருவாக்கினார். நிறைவேற்றதிகாரம் இல்லாவிட்டாலும் கிராமத்துக்கு அதிகாரம் காணப்பட வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும். எனவே சட்டத்தை மீறி ஜனாதிபதியால் செயற்பட முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை இன்றியே வெற்றி பெற்றார். அதேபோன்று பெரும்பான்மை இன்றி உள்ளுராட்சிமன்றங்களிலும் ஆட்சியமைக்க முடியும் என்று எண்ணுகின்றார். அது தவறாகும். அதனை புரிந்து கொள்வதற்கு அவர் ஜூன் 2ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டும்.

2ஆம் திகதி வாக்கெடுப்பின் பின்னரே ஜனாதிபதி அநுரகுமார முன்னிலையிலிருக்கின்றாரா அல்லது பின்தள்ளப்பட்டுள்ளாரா என்பது தெரியவரும். உள்ளுராட்சிமன்றங்களின் வருமானம் ஜனாதிபதி அநுரவிடமிருந்து கிடைப்பதில்லை. இங்கு கிடைக்கப் பெறும் நேரடி வருமானத்தைக் கொண்டு நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். எனவே அரசாங்கம் நிதி ஒதுக்கும் வரை காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படாது.

நிறைவேற்றதிகாரத்துக்கு சவால் விடுக்கும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இந்த தேர்தல் சட்டத்தை உருவாக்கினார். நிறைவேற்றதிகாரம் இல்லாவிட்டாலும் கிராமத்துக்கு அதிகாரம் காணப்பட வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும். எனவே உள்ளுராட்சிமன்றங்களையும் பெலவத்த அலுவலகத்தில் கட்டுப்பாட்டில் எடுக்க நினைத்தால் அதற்கு எதிர்க்கட்சிகள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.

இயலாமையுடையவர்களின் இறுதி ஆயுதம் அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆனால் அதனைக் கொண்டு ஜனநாயகத்தை அழிக்க முடியாது. கட்சி தலைமையகத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய நாம் செயற்படுவோம். மக்களால் எதிர்க்கட்சிகளுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சிமன்றங்களில் நாம் ஆட்சியமைத்து மக்களுக்கான சேவையாற்றுவோம் என்றார்.