வேலையற்ற பட்டதாரிகளுக்கு முதல்வரின் விளக்கம்

239 0

இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண சபைக் கூட்டத்திற்கு சென்ற போது வேலையற்ற பட்டதாரிகள் எனக் கூறப்பட்ட பல இளைஞர் யுவதிகள் எமது வடமாகாண சபை மற்றும் முதலமைச்சரின் அமைச்சுக் காரியாலயங்களின் முன் வாயிற் கதவுகளை அடைத்து பெருவாரியாக நின்று கொண்டிருந்தார்கள்.

வடமாகாண சபையின் பக்கமாக செல்லும் பாதையிலும் வாயிற் கதவடைத்து கூட்டம் நின்றது.

நான் வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்று அவர்கள் குறைகளைக் கேட்டறிந்தேன்.

ஏற்கனவே அவர்களுடன் நான் பேசிய விடயங்கள் தான் அவை. வேலையில்லாப் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வேண்டும் என்று கேட்டார்கள்.

அண்மையில் முதலமைச்சர் மாநாட்டின் போது ஜனாதிபதி வடகிழக்கு மாகாண முதலமைச்சர்களுக்கு கொள்கை ரீதியாக அளித்த வாக்குறுதியை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்.

ஜனாதிபதி கிழக்கு மாகாணத்தில் நாலாயிரத்திற்கும் மேலான பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்துவிட்டார் எமக்குக் கிடைக்கவில்லை என்ற ரீதியில் குறைபட்டுக் கொண்டார்கள்.

அவர்களின் புரியாமையை அவர்களுக்கு எடுத்து விளக்கினேன்.

ஜனாதிபதி வடகிழக்கு மாகாணங்கள் இரண்டு சம்பந்தமாகவே அவ்வாறான வாக்குறுதியை வழங்கினார் என்பதை எடுத்துக் காட்டினேன்.

பத்திரிகைச் செய்திகளோ ஒரு மாகாணத்திற்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் மற்றைய மாகாணத்தை புறக்கணித்துள்ளதாகவும் அமைந்திருந்ததைச் சுட்டிக்காட்டினேன்.

அன்றையதினம் (06.05.2017) முதலமைச்சர்கள் எல்லோர் முன்னிலையிலும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் வடகிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் விரைவில் வேலை வாய்ப்பைக் கொடுப்பதாகக் கூறியதைத் தெரிவித்தேன்.

அதற்கு அவர்கள் வடமாகாண சபை அவைத் தலைவர் தமக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அதே இடத்தில் வைத்து வாக்குறுதி அளித்ததை நினைவுபடுத்தி ஏன் இதுவரை அந்த வாக்குறுதி செயற்படுத்தப்படவில்லை என்று கேட்டார்கள்.

அதற்கு நான் மாகாண சபையுடன் தொடர்புடையயார் என்ன சொன்னாலும் தீர்மானம் எடுக்க வேண்டியது மத்திய அரசே என்று கூறி அதனாலேயே நாங்கள் இப்பொழுது மத்திய அரசுடன் பேசி வருகின்றோம் என்பதைத் தெளிவுபடுத்தினேன்.

எமது மாகாண சபையில் மொத்தமாக பட்டதாரிகளுக்கு 1171 வெற்றிடங்கள் இருப்பதையும் இங்குள்ள மத்திய அரசின் மாகாண திணைக்களங்களில் 329 வெற்றிடங்கள் இருப்பதையும் மொத்தம் 1500 பேர்களுக்கு உடனேயே வேலை வாய்ப்பைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதை அவர்களுக்கு விளக்கினேன் என்று வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.