யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் 2027 பிரிவு பயிலுகின்ற மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு வெள்ளிக்கிழமை (10) நடைபெற்றது.
இதில் வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சூழலியற் கல்வி சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும். சூழல் விழிப்புணர்வு சூழல் பாதுகாப்பில் எங்களைப் பங்குபற்றுநர்களாக்க வைக்கும். ஆனால், எமது கல்வி முறைமை பூமியையோ, சுற்றுச் சூழலையே அதன் முழுப் பரிமாணங்களோடும் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளைத் தரவில்லை.
நாம் பாடங்களைக் கலைப்பிரிவு, வர்த்தகப் பிரிவு, விஞ்ஞானப் பிரிவு என்றும் புவியியல், உயிரியல், இரசாயனவியல், பௌதிகவியல் என்றும் வரையறுத்தே கற்கிறோம்.
இந்தப் பாட எல்லைகளைக் கடந்து சிந்திக்க இயலாததால் யாவற்றையும் ஒருங்கிணைத்து நோக்கும் பூரண அணுகுமுறை எங்களிடம் இல்லாமற் போய்விட்டது. இதனால், அந்தகர்கள் யானையைப் பார்ப்பது போன்றே, நாம் ஒவ்வொருவரும் நமது துறைசார் கல்வி அறிவின் ஊடாக மட்டுமே பூமியை மதிப்பீடு செய்து வருகிறோம்.
அறிவியல் என்பது மனுக்குலத்தின் மேம்பாட்டுக்கானவற்றைக் கண்டறிவதற்கென உருவான துறை. ஆனால், அதுவே இன்று இயற்கையைப் பணிவிக்க முயலும், சகல வளங்களையும் அடியோடு அனுபவிக்கத் துடிக்கும் சூழல் விரோத சிந்தனைப் போக்காக உருவெடுத்துள்ளது.
ஏனைய உயிரினங்களோடு மனிதனும் ஓர் உயிரினம் என்பதை மறுத்த மனிதனே மையம் என்ற சிந்தனையே சூழல் மீதான ஆக்கிரப்புகளாக வெளிப்படுகின்றது.
மனிதனின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் பூமியும் அவ்வப்போது தனது எதிர்ப்புகளைக் காட்டி வருகிறது. காலம் தப்பிய அடைமழை, வெள்ளப் பெருக்கு, கடும் வரட்சி, பெரும் புயல், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் எல்லாம் மனிதர்களின் அடக்கு முறைகளுக்கு எதிரான பூமியின் எதிர்ப்பு நடவடிக்கைகள் தான்.
சூழலியற் கல்வி சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கண்டடையப் போதுமானதல்ல என்பதாலேயே பூமியை ஒரு தனித்த பேருயிரியாகக் காணுகின்ற கயா கோட்பாடு, பூமியை எங்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து விடுதலை செய்வதன் மூலம் பூமியின் எதிர்த்தாக்குதல்களில் இருந்து எங்களை விடுதலை செய்யும் விடுதலைச் சூழலியல் கோட்பாடு என்பன சமீப காலமாக மேலெழுந்து வருகின்றன.
இக்கோட்பாடுகள் தமிழர்களுக்குப் புதியது அல்ல. பாரதியாரின் காக்கை, குருவி எங்கள் ஜாதி, கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்ற பாடலில் பிற உயிரினங்களில் மட்டும் அல்லாது கல்லிலும் மண்ணிலும் எங்களைக் காணுகின்ற சூழல்நேயச் சிந்தனை வெளிப்பட்டிருக்கின்றது. இந்தச் சிந்தனை மரபே அனைத்துச் சூழற் பிரச்சினைகளுக்குமான தீர்வாக அமையும் என்றார்.


