டொன் பிரியசாத் கொலை வழக்கு : அடையாளம் காணப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

16 0

டொன் பிரியசாத் கொலை தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 2 சந்தேக நபர்கள் இன்று (9) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷண கெகுனவலவின் உத்தரவுக்கமைய இந்த அடையாள அணிவகுப்பு இன்று நடத்தப்பட்டது.

நீதிமன்றத்தில் முன்னிலையான மூன்று சாட்சிகள் இந்த இரண்டு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அடையாளம் காட்டப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான வழக்கறிஞர், இவ்வழக்கு விசாரணை தவறான முறையில் நடத்தப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், இந்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் டொன் பிரியசாத் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் உண்மையான கொலைக் குற்றவாளிகள் வெளியே தலைமறைவாகியுள்ளதாகவும் சந்தேக நபர்களுக்கு சார்பான வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அதேவேளை, நீதிமன்றத்தில் இன்று முன்னிலையான சாட்சிகளில் இருவர், சந்தேக நபர்களில் ஒருவரது உறவினர் ஆவார். சந்தேக நபர்கள் நன்கறிந்த சாட்சிகளை அடையாள அணிவகுப்பின்போது நீதிமன்றத்தில் அனுமதிப்பது சட்டத்துக்கு முரணானது என்றும் வாதாடியதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து, மேல் மாகாண தெற்கு சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர், சாட்சியங்களின் வாக்குமூலங்கள், சிசிடிவி பதிவுகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென நீதிமன்றத்தில் எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கொலை தொடர்பான தீவிர விசாரணைகள் தொடர்வதாகவும் அந்த அதிகாரி நீதிமன்றத்தில் உறுதிபட குறிப்பிட்டதையடுத்து, சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.