‘பாகுபலி-2’ ஆயிரம் கோடி வசூலித்து சாதனை- ரசிகர்களுக்கு பிரபாஸ் நன்றி

222 0

கடந்த ஏப்ரல் 28-ந் தேதி வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் இந்திய சினிமா வரலாற்றில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. உலகம் முழுவதிலும் வெளியான சில நாட்களிலேயே ரூ.1000 கோடியை எட்டி இந்திய சினிமாவில் வேறெந்த படமும் நிகழ்த்தாத சாதனையை செய்துள்ளது. இது இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

தேசங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து, பாஹுபலி 2 க்கு கிடைத்திருக்ககூடிய இந்த இமாலய வெற்றிக்குத் தன்னுடைய ரசிகர்களுக்கும், இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி அவர்களுக்கும் பிரபாஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது “மகத்தான இந்த தருணத்தில் என்னுடைய ஒவ்வொரு ரசிகரையும் ஆரத்தழுவி மகிழ்கிறேன். அவர்கள் என்மீது வைத்துள்ள அன்பில் திளைத்து நெகிழ்ந்து போய் இருக்கிறேன். நான் சிரமம் கொண்டு எடுத்த அத்தனை முயற்சிகளும் படக்காட்சிகளில் சிறப்பாக அமைந்து, இந்தியா  மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள உங்களுடைய பேரன்பை பெற்று தந்துள்ளது.

மேலும் இத்தனைப் பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுக் காவியத்தில், என் மீது நம்பிக்கை வைத்து, என்னையும் இந்த பயணத்தில் இணைத்துக்கொண்டு, எனக்கொரு முக்கிய பங்களித்து, என்னை ஊக்குவித்து சிறப்புற இயக்கி, இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி அவர்களுக்கு மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன் இவ்வாறு அதில் கூறியுள்ளார்.