வடக்கு கரையோர பிரதேசங்களில் போதைப்பொருள் பாவனை ; இளையோரை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!

90 0

வடக்கில் கரையோர பிரதேசங்களில் காணப்படும் போதைப்பொருள் பாவனை குறித்து இளையோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதைப்பொருள் பாவனையில் இருந்து இளையோரை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.

மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘போதைப்பொருள் வேண்டாம்; நமது இளையோரை பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு  செவ்வாய்க்கிழமை (29) மன்னாரில் நடைபெற்றது.

இதன்போது இளைஞர்கள், யுவதிகள், திணைக்கள அதிகாரிகள் உள்ளடங்கலாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

வடக்கில் உள்ள கரையோரப் பகுதிகளை போதைப்பொருட்களின் மையங்களாக  இலங்கையில் பார்க்கக்கூடிய ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக இன்று காணப்படுகிறது.

இந்த போதைப்பொருட்களை எமது இளையோர், சிறுவர்கள், குறிப்பாக பாடசாலை சமூகத்தை சீரழிக்கக்கூடிய நிலையில் பரந்து பட்டு காணப்படுவதை நாங்கள் ஊடகங்கள் மூலம் பார்க்கின்றோம்.

போதை பாவனையை எவ்வாறு கட்டுப்படுத்துவது, அதிலிருந்து எவ்வாறு எமது இளையோரை பாதுகாப்பது என்பது குறித்து நாம் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

அநீதிக்கு எதிராக நாங்கள் எவ்வாறு கூட்டாக குரல் கொடுப்பது? எப்படி தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வது? போன்றவை தொடர்பாக வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இளையோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

அதனுடன் துறை சார்ந்து செயலாற்றுபவர்களையும் உள்ளடக்கி கூட்டுக் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம் என்றார்.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் பசீர் முகமட் றசாக் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.