வாய்ப்பு கிடைத்தால் ஆட்சியைக் கவிழ்க்க காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்

68 0

வாய்ப்பு கிடைத்தால் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன. மக்கள் எமக்கு 5 ஆண்டுகளுக்கான ஆணையை வழங்கியிருக்கின்றனர். எனவே ஆட்சி கவிழ்ப்பிற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டால் மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். ரணில், சஜித் இந்நாட்டின் ஜனாதிபதியாக வேண்டுமென நினைத்தால் அது அவர்களது நிறைவேறாத கனவாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

வலல்லாவிட்ட பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இவ்வாண்டு டிசம்பரில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவார் என கபீர் ஹசீம் கூறுகின்றார். இவ்வாண்டு தேர்தலொன்று இல்லாத நிலையில் அவர் எவ்வாறு இந்த கருத்தினை வெளியிட்டார்? வாய்ப்பொன்று கிடைத்தால் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் எமக்கு 5 ஆண்டுகளுக்கான ஆணையை வழங்கியிருக்கின்றனர். அதில் இன்னும் ஒரு ஆண்டு கூட நிறைவடையவில்லை.

எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு மாத்திரமின்றி, அதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கும் மக்கள் எமக்கு வாக்களிப்பர் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே ரணில், சஜித் இந்நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என்று எண்ணினால் அது அவர்களது நிறைவேறாத கனவாகவே இருக்கும். கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடிய பின்னர் ரணில் ஜனாதிபதியானார். அவ்வாறான சம்பவம் மீண்டும் மீண்டும் இடம்பெறும் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது மிகவும் முட்டாள் தனமான எதிர்பார்ப்பாகும். இது முற்று முழுதாக மக்களின் ஆணையையும் நம்பிக்கையையும் பெற்ற ஆட்சியாகும். எனவே எவருக்கும் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மக்கள் இடமளிக்கப் போவதில்லை என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.

மே 6ஆம் திகதி தேர்தலின் பின்னர் நாம் அதனை உறுதிப்படுத்திக் காண்பிப்போம். நாம் இந்த நாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்தியிருக்கின்றோம். தற்போது எதிர்க்கட்சிகள் பிரசாரத்தை முன்னெடுத்துக் கொண்டிருப்பதைப் போன்று நாம் ஒருபோதும் பொய் கூறவில்லை.

1970களில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே பொய் கூறி ஆட்சியைக் கைப்பற்றியது. எமக்கு ஆட்சியை வழங்கினால் நாட்டில் வன்முறை வெடிக்கும் எனக் கூறினர். அவர்கள் கூறியதைப் போன்று எதுவும் இடம்பெறவில்லையல்லவா? ஊழல் மோசடியற்ற நாட்டை உருவாக்குவோம் என உறுதியளித்திருந்தோம்.

அதனை செயலில் நிரூபித்துக் காண்பித்துள்ளோம். எனினும் தற்போது கிராமிய மட்டத்தில் சிறு ஊழல், மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. மே 6 தேர்தலின் பின்னர் அவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம் என்றார்.